வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
புதுவை,
வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.மளிகை கடைவில்லியனூரை அடுத்த அரசூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். தினமும் காலை 7 மணிக்கு கடையை திறந்து இரவு 10 மணியளவில் மூடுவது வழக்கம். இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. போலீஸ் விசாரணைமேலும் இவரது கடையின் அருகில் திலாசுப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, விலை உயர்ந்த கேமரா, பிரிண்டர் மற்றும் மெமரி கார்டு, பென் டிரைவ் ஆகியவை திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். இது தொடர்பாக கோவிந்தராஜ், வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம்அரியாங்குப்பம் அருகே டோல்கேட் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 60). எல்.ஐ.சி. முகவர். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது அலுவலகத்தை உடைத்து மர்மநபர், அங்கிருந்த பணத்தை திருடிச்சென்றார். இதன் அருகில் உள்ள வெல்டிங் கடை மற்றும் காலியாக உள்ள மற்றொரு கடையின் பூட்டுகளை உடைத்து மர்மநபர் திருட முயன்றார். ஆனால் அந்த கடைகளில் பணம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டது பற்றி அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த அலுவலகம் மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மர்மநபர் ஒருவர் கடைகளின் பூட்டுகளை உடைப்பது பதிவாகி இருந்தது. இது குறித்து லட்சுமிபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் அடுத்தடுத்து ஒரே நாள் இரவில் எல்.ஐ.சி. முகவர் அலுவலகம் மற்றும் 4 கடைகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.