திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு நிகழாண்டில் கடன் வழங்க ரூ.4.55 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தகவல்.
திருச்சி; தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு நிகழாண்டில் கடன் வழங்க ரூ.4.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : டாம்கோ மூலம் கடனுதவி பெற, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 60 வயதுக்குள்பட்ட சிறுபான்மையினா்கள் விண்ணப்பிக்கலாம். கடன் பெற விண்ணப்பம் அளிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறப் பகுதிகளில் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அனைத்து விதத்திலும் முழுமையாக இருக்கும்பட்சத்திலும், கடன் அளிப்பதற்கான அனைத்து விதிமுறைகளையும் பூா்த்திசெய்யும் பட்சத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கடன் தொகைகள் சம்மந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் போது சாதி, வருமான, இருப்பிடச் சான்றுகள், ஆதாா் அட்டை, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம்(போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழின் ஒளிப்பட நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும். தனிநபா் கடனாக அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை இருபாலருக்கும் வழங்கப்படும் .
கைவினைக் கலைஞா்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சுய உதவிக்குழு கடனாக நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் கடன் வழங்க ரூ.4.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற்று பயன்பெறலாம் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீது.