ஶ்ரீலங்காவில் தேர்தல் முறைகளிலும், சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத் தேர்வு குழுவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமனம்
ஶ்ரீலங்கா
தேர்தல் முறைகளிலும், சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்வு குழுவில் புதன்கிழமை (22) புதிதாக இருவர் சேர்க்கப்படுள்ளார்கள். சிறுபான்மையின கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பிரஸ்தாப பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்வுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இடம் பெற வேண்டியதன் அவசியம் ஆரம்பத்திலிருந்தே பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதேவேளை, 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரஸ்தாப தேர்தல் சட்டம், தேர்தல் முறைமை சம்பந்தமான தெரிவுக் குழுவின்முன் தோன்றி சாட்சியமளிக்க இருக்கின்றது.
இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவுக் குழுவின் முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்கு மூலங்களை அளிக்க உள்ளார். இதில் பல்வேறு ஆதாரபூர்வமான ஆவணங்களை முன்வைத்து முஸ்லிம் காங்கிரஸ் வாக்குமூலம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.