முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது அதிமுக, பாஜக வெளிநடப்பு
திருச்சி,
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் சனிக்கிழமை காலை கூடியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.ஸஇதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,3 வேளாண் சட்டங்களும் அழிக்கக் கூடியது. சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல.எனவே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார் விலை குறித்து 3 சட்டங்களில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. 3 சட்டங்களையும் முழுமையாக எதிர்க்கிறோம்.வேளாண் சட்டங்கள் தனியாருக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு விரோதமாகவும் உள்ளன இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இருப்பினும் காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே. ஷாகுல் ஹமீது