‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.
திருச்சி; தமிழகத்தில் எந்த கால கட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். பின்னர் பள்ளியில் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளிலும் அமைச்சர் பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது துறையூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு மாணவிகளுக்கு கட்டப்பட்டிருந்த ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவிகளுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார்.
மேலும் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூலகம் மற்றும் ஓவிய அறை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். துவாக்குடி பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளிகளில் கள ஆய்வுக்கு செல்லும் போது பல கருத்துக்களை கூறுகின்றனர். பல பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேட்டுள்ளனர். அதை முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் எல்கேஜி, யுகேஜி அடங்கிய ஒரு மாதிரி பள்ளிகளை ஏற்படுத்தி வருகிறோம். 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர்.
அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். அப்போது, தற்போது 12ம் வகுப்பு முடித்து கூடுதல் மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்களும் தேர்வு எழுதலாம். இது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தால் சாத்தியம். இல்லையென்றால் அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும். ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் படத்துடன் வழங்கப்பட்ட குறிப்பேடு உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை மாற்றாமல் வழங்க என்ன மாற்று வழி உள்ளது என முதல்வரிடம் ஆலோசித்து வழங்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5.5 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்டராக வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். மிகவும் வருத்தமாக இருக்கிறது..நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்-அமைச்சரிடம் இதுகுறித்து பேச உள்ளேன். தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவோம்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஷாஹுல் ஹமீது.