திருச்சி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது
திருச்சி,
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட வில்லை. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10, 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்களை தமிழக அரசு அச்சிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி திருச்சி மாவட்டத்திற்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு அவை மேலூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது.தற்போது நடப்பு கல்வியாண்டுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்க இருப்பதால் குடோனில் உள்ள பாடப்புத்தகங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி ஆகிய 4 கல்வி மாவட்டங்களுக்கும் தனித்தனியாக பிரித்து நேற்று லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நேரடியாக செல்ல முடியாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக 10, 11 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்தபடி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டன. ஆனால், 9-ம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் பெரும் பாலானவர்களிடம் இல்லை. இருப்பினும் பிளஸ்-1 வகுப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தனர். ஷாகுல்ஹமித்