தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு! 40 வருட நிறைவு 31.5.2021
கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொதுஐ நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்த தினம் இன்றாகும். 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் ஒட்டுமொத்த உதாரணமாகவே யாழ் நுலகம் தீக்கிரை யாக்கப்பட்ட சம்பவத்தை சர்வதேசம் அந்நாளில் நோக்கியது.
இலங்கையின் இனப் பிரச்சினையானது மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு யாழ். நூலக எரிப்பு சம்பவமும் காரணமாக அமைந்திருந்தது எனலாம். தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காத வையாகும்.
இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த பெறுமதியான நூல்கள் அங்கே இருந்தன.யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள கல்விமான்கள். புத்திஜீவிகள், பேரறிஞர்கள், நலன் விரும்பிகள் போன்றோரால் அன்பளிப்பு செய்யப்பட்ட பெறுமதியான நூல்கள் அங்கு இருந்தன. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அனைத்தும் ஒரே நாளில் சாம்பலாகிப் போனது.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் முக்கிய பதிவாக அமைந்த யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும். இலங்கை தமிழ் மக்களை மாத்திரமின்று உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு. யாழ்ப்பாணம் பொது நூலகம் சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. நூலகம் எரிக்கப்பட்டமை இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது . புவி பாலாஜி