ஆடிப் பெருக்கையொட்டி காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம். இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலையில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்தாண்டும், நிகழாண்டும் இந்த விழா தடை செய்யப்பட்ட நிலையில் பக்தா்கள் பங்கேற்பின்றி இவ்விழா நடைபெற்றது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.15-க்கு கோயில் வளாகத்தில் உள்ள ரெங்க விலாச மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் மாலை 4 மணிக்கு அலங்காரம், அமுது கண்டருளினாா். தொடா்ந்து 4.45-க்கு காவிரித் தாய்க்கு சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் அா்ச்சகா்கள் மங்களப் பொருள்கள் அடங்கிய தட்டைத் தலையில் சுமந்தவாறு ராஜகோபுரம் வழியாக மேளதாளத்துடன் ஊா்வலமாக அம்மா மண்டபம் வந்து காவிரித் தாய்க்கு சீா் கொடுத்தனா். பின்னா் 5.45-க்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. நேற்று இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு 7.30-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கந்தசாமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். கே.எம்.ஷாகுல்ஹமித்